தமிழ்நாடு வெள்ளத்தில் மிதக்கும்போது பிரதமர் மோடி திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறார் - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்..!
தமிழகத்தின் 14 மாவட்டங்கள் ஃபெஞ்சல் புயலால் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதால், இடைக்கால நிவாரணமாக ரூ. 2 ஆயிரம் கோடியை விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில், பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள்குறித்து தமிழக எம்.பி.க்கள் உரையாற்றினர். அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், புயல் பாதிப்பைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் உடனடி நிதி கேட்டுள்ளார். எனினும், மத்திய அரசு தொடர்ச்சியாக வரலாற்று தவறை செய்து வருகிறது என்றார்.
இதுகுறித்து பேசிய அவர், “புதுச்சேரி, தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக முதலமைச்சர் உடனடி நிதி வேண்டும் எனக் கேட்டுள்ளார். எனினும், மத்திய அரசு தொடர்ந்து வரலாற்று தவறு செய்து வருகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் புயல் பாதிப்புகளுக்குத் தமிழ்நாடு சார்பில் ரூ. 43 ஆயிரத்து 993 கோடி நிதி கேட்கப்பட்டது.”
“எனினும், மத்திய அரசு ரூ. 1,729 கோடி மட்டுமே கொடுத்துள்ளது. மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தைக் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வெள்ளத்தில் மிதக்கும்போது, பிரதமர் மோடி திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தது வரலாற்று தவறானது,” எனத் தெரிவித்தார்.