காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு 3 மாத சிறை தண்டனை..!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் மிடாலம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் ஒன்றில், அப்பகுதியைச் சேர்ந்த ஜோசப் மற்றும் அவரது மகன் பால்துரை வீடு கட்டி வருவதாக கடந்த 2014-ல் கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது
இதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று வருவாய்த்துறையினர் ஆய்வு செய்ததில், அவர்கள் அரசு புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து வீடு கட்டியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஜேசிபியின் உதவியோடு ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஜோசப், பால்துரை மற்றும் சிலருடன் இணைந்து அப்போதைய மாவட்ட காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் ராஜேஷ்குமார், ஆக்கிரமிப்பை அகற்றவிடாமல் வருவாய்த்துறையினரை தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ராஜேஷ்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை முயற்சி ஆகிய 7 பிரிவுகளின் கீழ் 20-01-2014 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நாகர்கோவில் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் 11 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி ஹசன் முகமது இன்று (ஏப்.21) தீர்ப்பு வழங்கினார். இதன்படி, தற்போது கிள்ளியூர் எம்.எல்.ஏ.வாக உள்ள ராஜேஷ்குமார் மற்றும் 2 நபர்களுக்கு, தலா 3 மாத சிறை தண்டனையுடன், ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.