நான் முதல்வன் திட்டத்தில் பயின்று முதலிடம் பிடித்தவருக்கு முதல்வர் வாழ்த்து..!

மத்திய அரசு தேர்வாணையம், இந்திய குடிமை பணிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில், தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் எனும் மாணவர் அகில இந்திய அளவில் 23வது இடத்தை பிடித்தும், தமிழகத்தில் முதலிடத்திலும் தேர்வாகியிருக்கிறார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃபெஸ், ஐஆரெஸ், ஐஎஃபெஸ் உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான இடங்களை நிரப்ப, மத்திய பணியாளர் தேர்வாணையம் UPSC தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் நிலைத்தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என 3 நிலை தேர்வுகள் இருக்கின்றன.
இந்த தேர்வானது, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும். இதையடுத்து, கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் நிலைத்தேர்வும், செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வும், இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நேர்முகத்தேர்வும் நடைப்பெற்றது.
இந்த தேர்வு முடிவுகளை https://upsc.gov.in என்ற தளத்தில் காணலாம். இந்த தேர்வை எழுதியவர்களில் மொத்தம் 1009 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக தரவுகள் கூறுகின்றன. இதில், இந்திய அளவில் முதலிடத்தை, உத்தர பிரதேசத்தை சேர்ந்த சக்தி துபே என்பவர் பெற்றிருக்கிறார். ஹர்ஷிதா கோயல் இரண்டாவது இடத்தையும், டோங்கரே அர்ச்சித் பராக் 3ஆம் இடத்தையும் பிடித்திருக்கின்றார்.
தமிழ் நாட்டில் இருந்து UPSC தேர்வு எழுதிய மாணவர் சிவச்சந்திரன், இந்திய அளவில் 23வது இடத்தை பிடித்திருக்கிறார். இவர், தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் படித்தவர். இவரைப்போல, இந்த திட்டத்தில் பயின்ற 18 பேர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இந்திய அளவில் 39வது இடத்தை பெற்ற மோனிகாவும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படித்தவர்.
இந்த செய்தி தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் “எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த #நான்_முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் #UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது!” என்று குறிப்பிட்டிருக்கிறார். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.