கோவை ஸ்தம்பிப்பு : மாநகராட்சி ஓட்டுனர்கள் திடீர் போராட்டம்..!

கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் கிட்டத்தட்ட 4,000 ஓட்டுநர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மாநகரப் பகுதியில் உள்ள குப்பைகளை வாகனத்தில் எடுத்துக்கொண்டு வெள்ளலூர் குப்பை கிடங்கிற்க்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருங்கால வைப்பு தொகையை (பி.ஃஎப்.) முறையாக அவர்களது கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்வதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை உக்கடம் புல்லுகாடு பகுதியில் சுமார் 150 வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்பந்த தூய்மைப்பணி ஓட்டுனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஓட்டுனர்களின் இந்த திடீர் போராட்டத்தால் மாநகரம் முழுவதும் உள்ள குப்பைகளை சேகரிக்கப்படாமல் பாதிப்பு அடைந்துள்ளது.