1. Home
  2. தமிழ்நாடு

மோசடி போன் கால் நம்பி ரூ.67 லட்சத்தை இழந்த கோவை தொழிலதிபர்..!

1

கோவையை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜார்ஜ் (75). இவருக்கு கடந்த மாதம் வாட்ஸ்அப் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர் தான், மும்பை பாந்த்ரா காவல் நிலையத்தில் இருந்து பேசுவதாகவும், ராஜ் குந்தரா என்ற மோசடி பேர்வழியை கைது செய்துள்ளோம், அவன் உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி மும்பையில் வங்கி ஒன்றில் கணக்கு தொடங்கியும், சிம்கார்டு வாங்கியும் பல மோசடி செய்திருக்கிறார். அந்த வழக்கில் உங்களையும் சேர்த்துள்ளோம், அதனால் விரைவில் உங்களைக் கைது செய்யப்போகிறோம் என்று கூறியதாக அறியப்படுகிறது.

அதிலிருந்து தப்பிக்க, அபராதமாக ஜார்ஜின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை உடனே அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.இதைக்கேட்டு பயந்துபோன ஜார்ஜ், தனது வங்கிக் கணக்கில் வைத்திருந்த வைப்பு நிதி 67 லட்சத்தை அந்த நபர் கூறிய மத்திய பிரதேச வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்பிறகும், அந்த நபர் மேலும் பணம் செலுத்தக் கூறி ஜார்ஜை மிரட்டியதால், மற்றொரு வங்கிக் கணக்கில் இருந்த 10 லட்சம் ரூபாயை அனுப்ப, வங்கி கிளைக்கு ஜார்ஜ் நேரடியாகச் சென்றுள்ளார்.

அப்போது வங்கி மேலாளர், 10 லட்சம் ரூபாயை எதற்காக எடுக்கிறீர்கள் என்று கேட்டபோது, அவரிடம் நடந்ததை ஜார்ஜ் கூறியுள்ளார். இதைக்கேட்ட வங்கி மேலாளர், இது மோசடி வேலை, இது குறித்து சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் செய்யும் படி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி ஜார்ஜ், கோவை சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.

இதனை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து வங்கி ஆவணங்கள், செல்போன் எண்களை வைத்து இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடித்தனர். அதன் தொடர்ச்சியாக, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளிகளை பிடிக்க, சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் அருண் தலைமையிலான போலீசார் மத்திய பிரதேசத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு, மத்திய பிரதேச போலீசாரின் உதவியோடு, மோசடியில் ஈடுபட்ட மத்திய பிரதேசத்தில் உள்ள குணா மாவட்டத்தைச் சேர்ந்த அனில் ஜடேவ்(28), முகுல் சந்தல்(24) மற்றும் ரவிக்குமார் சர்மா(23) ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட லேப்டாப், செல்போன்கள் மற்றும் 8 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசாரின் விசாரணையில் இந்த கும்பல் மீது 12 மாநிலங்களில் 52 வழக்குகள் இருப்பதும், பல கோடி ரூபாய் மோசடியில் ஈட்டுப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

Trending News

Latest News

You May Like