10ம் வகுப்பு மாணவர்கள் 'ஷாக்' ..! இனி ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள்...!

கடந்த 2023 ம் ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்றும், மாணவர்கள் விருப்பப்படி ஒரு முறை அல்லது இரண்டு முறையும் தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.
மாணவர்களின் செயல் திறன் எந்த தேர்வில் சிறப்பாக உள்ளதோ அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு குறித்த மாணவர்களின் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று இது குறித்த உறுதியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை எழுத அனுமதிக்கும் திட்டம் வரும் 2025 – 26ஆம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இது ஒரு தரப்பினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் இன்னொரு தரப்பினர் ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எப்படி எழுதுவது என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடந்த கூட்டத்தில்,
1) பத்தாம் வகுப்பில், 2025-2026 லிருந்து இரண்டு வாரியத் தேர்வுகள் நடத்தப்படும்.
2) அதற்கான வரைவுக் கொள்கையை உருவாக்க வேண்டும்.
3) இந்த வரைவுக் கொள்கை அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும், அதாவது பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பிறரிடமிருந்து (பொது மக்கள்) பதில்களைப் பெற சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்படி, வரைவுக் கொள்கை பரந்த விவாதங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்டு, CBSE இணையதளமான https://cbse.gov.in இல் பதிவேற்றப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டன.