அதிர்ச்சியில் குடிமகன்கள்..! மது பாட்டிலில் தவளை..!

திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே உள்ள சென்னக்கரை பகுதியை சேர்ந்த ரவி மகன் வேல்முருகன் (33). கூலித்தொழிலாளியான இவர் நேற்று சிறுகாம்பூரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கி குடித்துள்ளார். சென்னக்கரை பேருந்து நிறுத்தத்தில் இருட்டில் அமர்ந்து குடித்தபோது பாட்டிலில் ஏதோ அடைப்பு இருந்திருக்கிறது. உடனடியாக செல்போன் டார்ச் லைட் அடித்து பார்த்தபோது மது பாட்டிலில் இறந்து நிலையில் தவளை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து மது பாட்டிலுடன் டாஸ்மாக் கடைக்கு சென்ற வேல்முருகன் அங்கு விற்பனை பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் கூறி முறையிட்டுள்ளார். ஆனால் இதனை பொருட்படுத்தாத டாஸ்மாக் ஊழியர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் இருந்த மது பாட்டிலை பிடுங்கி கீழே வீசி உடைத்ததாக கூறப்படுகிறது.
மது பிரியர்கள் கூறுவது இது எங்களுக்கு புதியது அல்ல இதுபோன்று அடிக்கடி பூரான், கரப்பான் பூச்சி ஆகியவை நாங்கள் பார்த்து உள்ளோம், இது குறித்து கடை ஊழியர்களிடம் கேட்டால் இஷ்டம் இருந்தால் வாங்கி குடி இல்லை என்றால் போ என்று பேசி வருகின்றனர். இதில் கடையின் மேற்பரவாளர் மற்றும் இரண்டு நபர்கள் எப்பொழுதும் மது போதையில் இருப்பார்கள், இவர்களை யாரு கண்டிப்பது? என்று கூறி வருகின்றனர்.
இதனையடுத்து சிறுகாம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.