1. Home
  2. தமிழ்நாடு

இன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா தொடங்குகிறது..!

1

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

இதையொட்டி நேற்று முன்தினம்தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் முழங்க முகூர்த்தக்காலில் புனிதநீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலின் நுனியில் மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கல பொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

அதன் பின்னர் மதியம் 12.30 மணியளவில் கடக லக்னத்தில் முகூர்த்தக்காலை தேரில் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் அர்ச்சகர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் நட்டனர்.

அப்போது கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின. தெடர்ந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொடிமர மண்டபம் வருகிறார். காலை 5.30 மணிமுதல் காலை 6.15 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கொடிமர மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பேரி தாடனம் நடைபெறுகிறது. 

மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாக சாலையை சென்றடைகிறார். 

அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாளை (29-ம் தேதி) அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். தொடர்ந்து மாலை கற்பகவிருட்ச வாகனத்திலும், 30-ம் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும் 1-ம் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும். மாலை கருடவாகனத்திலும், 2-ம் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 3-ம் தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

தொடர்ந்து 4-ம் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 5-ம் தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்ககுதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 6-ம் தேதி நடைபெறுகிறது. 7-ம் தேதி சப்தா வரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 8-ம் தேதி நம் பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 

Trending News

Latest News

You May Like