இன்று அயோத்தி செல்லும் 2 மாநில முதல்வர்கள்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/2c15ac7a63d9967827a755245159b6a5.jpg?width=836&height=470&resizemode=4)
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா கடந்த 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினர் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோருடன் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் இன்று தரிசனம் செய்ய உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற பிரான் பிரதிஷ்டை விழாவிற்கு முறையான அழைப்பு வரவில்லை என்று கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். மேலும் அவர் தனது குடும்பத்துடன் கோவிலுக்குச் செல்ல விரும்புவதாகவும், சில நாட்கள் கழித்து செல்ல விரும்புவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.