ரூ.1க்கு சிக்கன் பிரியாணி : குவிந்த வாடிக்கையாளர்கள்!

புதிதாக திறக்கப்படும் பிரியாணி கடைகளை விளம்பரப்படுத்த குறைந்த விலையில் பிரியாணி விற்பனை என்று அறிவிப்பதும், அதனை வாங்குவதற்கு கூட்டம் முண்டியடிப்பதையும் நாம் பார்த்திருப்போம். அதுபோன்ற ஒரு சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துள்ளது.
திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தில் மகேஸ்வரன் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த ஹோட்டல் 3வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதிரடி ஆபராக பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு இன்றும் நாளையும் சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து விளம்பரத்தில் இருந்த போன் நம்பரில் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர்கள் எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று கேட்டுள்ளனர். இன்று மதியம் 12 மணி என்று கூறியவுடன் அதற்கு முன்பாக இன்று காலை 11 மணி முதலே மெஞ்ஞானபுரத்தில் உள்ள ஹோட்டல் முன்பு வாடிக்கையாளர்கள் குவிந்தனர். சுமார் 250க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பழைய ஒரு ரூபாய் நோட்டை கொடுத்து வரிசையில் நின்று சிக்கன் பிரியாணி வாங்கிச் சென்றனர். விற்பனை தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் சிக்கன் பிரியாணி முழுவதும் விற்றுத் தீர்ந்தது.
நாளையும் (அதாவது இன்றும் )இதே போல் சிக்கன் பிரியாணி ஒரு ரூபாய் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தான் பழைய ஒரு ரூபாய் நோட்டை சேகரிப்பதற்காக இதுபோல் முயற்சியில் ஈடுபட்டதாக ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்தார்.
ஒரு ரூபாய்க்கு பிரியாணி என்றவுடன் மெஞ்ஞானபுரம் மற்றும் அந்த பகுதியில் கடை வைத்திருந்த வியாபாரிகள் மற்றும் மெஞ்ஞானபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. எனினும் பிரச்னைகள் ஏதுமின்றி பிரியாணியை விற்று முடித்தனர் கடை ஊழியர்கள்.