நாளை முதல் சென்னை ஏசி மின்சார ரயில் சேவையில் முக்கிய மாற்றம்..!

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் தற்போது ஏசி வசதி இல்லை. இதனால் ஏசி வசதியுடன் கூடிய ரயில்களை இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருந்தது. பயணிகளின் இந்த கோரிக்கையை ஏற்று, கடந்த 19 ஆம் தேதி சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிய ஏசி மின்சார ரயில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
கோடை வெப்பம் தகிக்கும் நேரத்தில் ஏசி மின்சார ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்தது பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால், இந்த ரயில் கட்டணம் மற்றும் ரயில் இயக்கப்படும் நேரம் ஆகியவை பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் இல்லை என்பது பயணிகள் முன்வைத்த பெரிய புகாராக இருந்தது.
அதாவது, இந்த ரயில் கடற்கரையில் இருந்து காலை 7 மணிக்கு செங்கல்பட்டுக்கு இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து காலை 9 மணிக்கு கடற்கரைக்கு இயக்கப்படுகிறது. பின்னர் கடற்கரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு செங்கல்பட்டுக்கும், செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45 மணிக்கு கடற்கரைக்கும் இயக்கப்பட்டது. இரவு நேர ரயில் சேவையாக கடற்கரையில் இருந்து 7.35 மணிக்கு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்டது.
பயணிகள் அதிகம் பயன்படுத்தும் பீக் நேரங்களில் இந்த ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பயணிகள் முன்வைத்தனர். தெற்கு ரயில்வே இது தொடர்பாக பயணிகளிடம் கருத்து கேட்க வாட்ஸ் அப் எண்ணை வெளியிட்டு இருந்தது. இதில் பயணிகள் தங்கள் கருத்துக்களை அளித்து இருந்தனர். இதில் பெரும்பாலான பயணிகள் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில்தான் பயணிகள் கோரிக்கையினை ஏற்று ஏசி மின்சார ரயில் சேவையின் நேரத்தை மாற்றி அமைக்க ரயில்வே முன்வந்துள்ளது. அதேபோல சேவைகளின் எண்ணிக்கையும் 8 ஆக உயர்த்தியுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரயில்கள் இயக்கப்படும் நேரம் மாற்றம் :
* புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புறநகர் ஏசி மின்சார ரயில்கள் தாம்பரத்தில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு காலை 7.35 மணிக்கு செங்கல்பட்டுக்கு வந்து சேரும்.
* செங்கல்பட்டு ஜங்ஷனில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு 9.25 மணிக்கு சென்னை பீச் வந்தடையும்.
* கடற்கரையில் இருந்து 9.41 மணிக்கு புறப்பட்டு 10.36 மணிக்கு தாம்பரம் செல்லும்.
* மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு 1.55 மணிக்கு பீச் ரயில் நிலையம் வந்து அடையும்.
* பீச் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு செங்கல்பட்டு சென்று சேரும்.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் சேவை
* செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.
* செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு 8.50 மணிக்கு தாம்பரம் செல்லும்.
* வரும் மே 2 ஆம் தேதி முதல் இந்த புதிய அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும். அதேபோல இனி ஞாயிற்றுக்கிழமையிலும் ஏசி மின்சார ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இதற்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் இயக்கப்படாது என்று கூறப்பட்டது கவனிக்கத்தக்கது. ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு, கூடுதல் சேவை ஆகியவற்றை ரயில்வே ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும், கட்டணம் குறைக்க வேண்டும் என்பது பற்றி ரயில்வே எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
* இந்த ரயிலில் தற்போது அதிகபட்சமாக ரூ.105 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்ச கட்டணமாக ரூ.35 வசூலிக்கப்படுகிறது.
* தாம்பரத்தில் இருந்து எழும்பூருக்கு வர வேண்டும் என்றால் ரூ.60 கட்டணம் ஆகும். மெட்ரோ ரயில்களை விட அதிகம் என சொல்லும் அளவுக்கு கட்டணம் அதிகமாக இருப்பதால், ரயில்களின் கட்டணத்தை குறைப்பது பற்றியும் தெற்கு ரயில்வே பரிசீலிக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.