இன்று நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளதால், சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றனர். இதனால் சென்னையில் உள்ள வேளச்சேரி, கிண்டி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், அதனை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தொடர் கனமழை காரணமாக, சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று (நவ.30) நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.