தத்தளித்த சென்னை.. பிளேனில் வந்து இறங்கியதும் நள்ளிரவில் ஆய்வுக்கு சென்ற முதலமைச்சர் !!

சென்னை மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில், மழை பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னையில் நேற்று பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை கொட்டியது. குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் பல மணி நேரமாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதியுற்றனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
திடீரென கொட்டிய கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதிகாரிகளும் மக்களும் என்னசெய்வது என தெரியாமல் முழித்தனர். திடீர் மழை காரணமாக பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் முழுவதுமாக நனைந்தபடி, சென்றனர். மேலும் சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மழை பாதிப்பு மற்றும் மாநகராட்சி மேற்கொண்டு வரக்கூடிய, மழைநீர் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.
மேலும் மக்கள் அளித்துள்ள புகார்கள், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் முதலமைச்சரிடம் விளக்கம் அளித்தார். மேலும் மழை பாதிப்பினை சரிசெய்யும் பணிகள் குறித்தும் மாநகராட்சி அதிகாரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 7 மணியளவில் திருச்சியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்ததும், உடனடியாக களத்திற்கு சென்றது, மீட்பு பணியில் இருந்த பணியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் இருந்தது
newstm.in