இன்டர்போல் உதவியை நாடும் சென்னை போலீசார்..!
சென்னை கோபாலபுரம், திருமழிசை, அண்ணா நகர், முகப்பேர், சென்னை பப்ளிக் ஸ்கூல், ஏ.ஆர். புரம், பூந்தமல்லி, பெரம்பூர், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 13க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.
நேற்று காலை 10.40 மணியளவில் வந்த தகவலில், மேலே குறிப்பிட்ட 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டதாகவும், மாணவர்களின் உயிரை காத்துக் கொள்ளுமாறும், தான் சொல்வதை சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பள்ளி மாணவர்களை மைதானங்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் வரவழைத்தனர். மேலும் பெற்றோர்களுக்கும் வெடிகுண்டு விஷயத்தை சொல்லாமல் பிள்ளைகளை வந்து அழைத்து செல்லுமாறு கூறிவிட்டனர்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் குழுவினர், போலீஸார் பள்ளிகளுக்கு சென்றனர். அங்கு வெடிகுண்டை நிபுணர்கள் தேடினர். அது போல் போலீஸார் பள்ளிகளுக்கு வந்த இமெயில் மிரட்டலை பார்த்த போது அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான தகவல் சென்றுள்ளது தெரியவந்தது.
johonsol01@gmail.com என்ற இமெயில் ஐடியில் இருந்து மெயில் வந்தது தெரியவந்துள்ளது. இதனிடையே பள்ளிகளில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்றும், மிரட்டல் வெறும் வதந்தி என்றும் சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து சென்னை போலீஸார் நேற்று மாலைக்குள் அந்த நபரை பிடித்து விடுவோம் என கூறியிருந்தனர்.
இந்த நிலையில் பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்த நபரை கண்டறிய இன்டர்போல் உதவியை நாட போலீசார் முடிவு செய்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் இன்டர்போல் உதவியை நாட சென்னை போலீசார் முடிவெடுத்துள்ளதாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் வெளிநாடுகளில் இருக்கும் தனியார் நெட்வொர்க்கை பயன்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.