இன்று முதல் 4 நாட்களுக்கு சென்னை மெட்ரோ அட்டவணையில் மாற்றம்!

சென்னை மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் 3.20 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2024 ஆம் ஆண்டில் மட்டும் 10.52 கோடி பேர் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை நாளான செவ்வாய்க்கிழமை, புதன், வியாழன் ஆகிய விடுமுறை நாட்களில் சென்னை மெட்ரோ ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை), 15 (புதன்கிழமை) மற்றும் 16 (வியாழக்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிறு/ விடுமுறை நேர அட்டவணையின்படியும், 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சனிக்கிழமையின் அட்டவணையின் படியும் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
ஞாயிறு/ விடுமுறை நேர அட்டவணை:
1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
2. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
சனிக்கிழமை அட்டவணை
1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
2. காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
3. காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணிமுதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.