பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு!!

பொது இடங்களுக்கு செல்லும் போது பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள், வார இறுதி நாட்களில் தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிகளவில் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள். அங்காடிகள் மற்றும் மார்க்கெட் பகுதிகள் போன்ற இடங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றனவா என கண்காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது உலக நாடுகளில் கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வகை தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இந்தியாவிலும் ஒரு சில மாநிலங்களில் இந்த தொற்று கண்டயறியப்பட்டுள்ளது. எனவே கீழ்க்கண்ட அறிவுரைகளை பொதுமக்கள் மற்றும் வணிக வளாகங்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் .
வணிக வளாகங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மேலும் பொதுமக்கள் வெளியில் செல்லும் பொழுது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் கோவிட் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
எனவே, வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
newstm.in