சென்னை மாநகராட்சி அதிரடி : இனிமேல் ‘இதுக்கும்’ உரிமம் கட்டாயம்..!
அண்மை காலமாக சென்னையில் சுற்றித்திரியும் நாய்களால், சிறுவர், சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால், நாய்களை வளர்ப்பது குறித்த விதிமுறைகளை சென்னை மாநகராட்சி வகுத்து வருகிறது. அத்துடன் சில கட்டுப்பாடுகளையும், அபராதங்களையும் அமல்படுத்தி உள்ளது.
அதுபோலவே, மாடுகள் வளர்ப்பிலும் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலையோரங்களில் புற்கள் முளைத்திருப்பதால் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் மேய விடுகிறார்கள். இதனால், இரவு நேரங்களில், சாலையின் நடுவில் படுத்துக்கொண்டிருக்கும் மாடுகளைக்கண்டு, கனரக வாகனங்கள் திடீரென பக்கவாட்டில் செல்வது போன்ற காரணங்களாலும் விபத்துகள் நடக்கின்றன.
அதேபோல பள்ளி, கல்லூரிக்கு செல்வோரும் வேலைக்கு செல்வோரும் பரபரப்புடன் செல்லும்போது, கால்நடைகள் சாலைகளை ஆக்கிரமித்தபடி வலம் வருகின்றன. இதன்காரணமாக போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுவதுடன், வாகனங்களில் வேகமாக செல்பவர்கள், திடீரென எதிரில் இருக்கும் மாடுகளின் மீது மோதிவிடுவதால் நிலைதடுமாறி விழுந்து கை, கால்களை உடைத்து காயமடைகின்றனர். சில நேரம் உயிரிழப்புகள் கூட ஏற்படுகின்றன.
போதிய இடமும், தொழுவமும் இல்லாமல் வளர்ப்பதால்தான், இப்படி சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. அவற்றைத் தடுக்கும்வகையில் மாநகராட்சி இந்தப் புதிய விதியை அமலுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மாட்டு தொழுவங்களுக்கு உரிமம் கட்டாயம் என்ற புதிய விதி ஜூன் முதல் அமலுக்கு வரயிருப்பதாகக் கூறப்படுகிறது. மாட்டு உரிமையாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டி வலியுறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சியின் இந்த அதிரடிகள் சென்னைவாசிகளின் கவனத்தைப் பெற்று வருகின்றன.