விரைவில் சென்னை கோவை மதுரை மாநகராட்சிகளில் மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும்..!

அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் பேசுகையில், "தமிழ்நாட்டில் கடைகோடி குக்கிராமங்களுக்கும் தேவையான தரமான மற்றும் நம்பகத்தன்மை கொண்ட போக்குவரத்து சேவையை தொடர்ந்து வழங்கிட இந்த அரசு உரிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் நிதியாண்டில் ஏற்கனவே அறிவித்துள்ளபடி 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்திட 1,031 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயன்பாட்டிற்கு உகந்த 250 பேருந்துகளை முற்றிலும் புதுப்பித்து இயக்குவதற்காக 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெருநகரங்களில் காணப்படும் காற்று மாசுபாட்டினை குறைத்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்துடன் சென்னை மாநகரத்துக்கு 950 மின் பேருந்துகள், கோயம்புத்தூர் மாநகரத்துக்கு 75 மின் பேருந்துகள், மதுரை மாநகருக்கு 100 மின் பேருந்துகள் என மொத்தம் 1,125 மின் பேருந்துகள் உலக வங்கி மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கி கடன் உதவியுடன் பொதுமக்களுடைய பயன்பாட்டிற்காக இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.
பெருகிவரும் நகரமயமாதலில் மிக முக்கியமான தேவையாக பேருந்து, புறநகர் ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்துக் கொண்ட பல்வேறு வசதிகளை ஒருங்கிணைக்கும் முனையங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அந்த வகையில் இவற்றை ஒருங்கிணைக்கும் பன்முகப் போக்குவரத்து முனையம் ஒன்று கிண்டியில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயணிகளுக்கு தேவையான அனைத்து நவீன வசதியுடன் ஏற்படுத்தப்படும். சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் இதேபோன்று பன்முக போக்குவரத்து முனையம் ஒன்று நவீன வசதியுடன் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
கடந்த 1997ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அறிமுகப்படுத்திய சிற்றுந்து (மினி பஸ்) திட்டம் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகர்ப்புறங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளிலும் மினி பஸ் சேவையை வழங்கிடும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் சுமார் 2000 வழித்தடங்களில் மினி பஸ் திட்டம் செயல்படுத்தப்படும்.
போக்குவரத்து கழகங்களின் செயல்பாட்டுத்திறன் சேவை, வளங்கள் மற்றும் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக போக்குவரத்துக் கழகங்களுக்கு செயல்பாட்டின் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்குவதற்காக 2000 கோடி ரூபாய் தொகையுடன் ஊக்க நிதியம் வரும் நிதி ஆண்டில் உருவாக்கப்படும். மேலும் மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சேவையினை மேம்படுத்தும் வகையில் சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ் செயல் திறன் இடைவெளி ரீதியாக 646 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த வரவு செலவு திட்டத்தில் மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கான 3600 கோடி ரூபாய், மாணவர்களுக்கான பேருந்து கட்டணம் மானியத்திற்காக 1782 கோடி ரூபாய், டீசல் மானியத்திற்காக 1857 கோடி ரூபாய் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் போக்குவரத்து துறைக்கு 12, 964 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது" என தெரிவித்திருக்கிறார்.