சென்னை ஏசி மின்சார ரயில் ரத்து..!

தமிழகத்தின் முதல் ஏ.சி. புறநகர் மின்சார ரயில் சேவை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ஏப்ரல் 19 முதல் தொடங்கியது. 12 பெட்டிகளைக் கொண்டுள்ள இந்த ரயிலில், 1,116 பேர் அமர்ந்தும், 3,798 பேர் நின்றும் பயணிக்கலாம். இந்த புதிய ஏ.சி. ரயில், அதிகபட்சமாக 110 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டுள்ளது.
இந்த ஏ.சி. ரயில், தாம்பரம் பணிமனையிலிருந்து அதிகாலை 5:45 மணிக்கு புறப்பட்டு, காலை 6:45 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடைகிறது. பின், கடற்கரையில் இருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்துக்கு 7:48 மணிக்கு, செங்கல்பட்டுக்கு 8:45 மணிக்கு செல்லும்.
சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில்கள் மாலை 3:45, 7:35 மணிக்கு புறப்படும். தாம்பரம் - செங்கல்பட்டு செல்லும் ரயில்கள், மாலை 4:20, இரவு 8:30 மணிக்கு செங்கல்பட்டுக்கு செல்லும். சென்னை கடற்கரை - செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் இரவு 7:35 மணிக்கு மட்டும் தாம்பரத்துக்குக் செல்லும்.
செங்கல்பட்டில் இருந்து காலை 9:00 மணி மற்றும் மாலை 5:45 மணிக்கு புறப்படும் ரயில்கள், தாம்பரத்துக்கு 9:38 மணி மற்றும் 6:23 மணிக்கு செல்லும். பின், காலை 10:30 மணி மற்றும் இரவு 7:15 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்.
ஏ.சி. மின்சார ரயில், கடற்கரை - தாம்பரம் இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் நிற்கும். இந்த சேவை, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படும்.
இந்நிலையில், ஏசி புறநகர் ரயில் பராமரிப்பு பணிகளின் காரணமாக இன்று (ஏப்ரல் 26) ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 49005 – சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏசி புறநகர் ரயில், சென்னை கடற்கரையில் இருந்து மாலை 3:45 மணிக்கு புறப்படும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ரயில் எண் 49006 – செங்கல்பட்டு - சென்னை கடற்கரை ஏசி புறநகர் ரயில், செங்கல்பட்டில் இருந்து மாலை 5:45 மணிக்கு புறப்படும் ரயில், செங்கல்பட்டு - தாம்பரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது.
பொது மக்கள் இந்த மாற்றங்களை கவனித்து பயண திட்டங்களை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.