1. Home
  2. தமிழ்நாடு

சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்..!

1

மாநில குற்ற புலனாய்வு துறை (சி.ஐ.டி) கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே ஆளும் கட்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் வகையில் பஸ்சில் ஊர் ஊராக யாத்திரை சென்று பொதுக்கூட்டங்களை நடத்தி வந்த சந்திரபாபு நாயுடு, கடந்த வெள்ளியன்று இரவு நந்தியாலா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதன் பின்னர் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அருகே பஸ்சை நிறுத்தி, அதிலேயே உறங்கினார். 

அவருடன் வந்த தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் அந்த திருமண மண்டபத்தின் அருகே இரவு முழுவதும் இருந்தனர். அப்போது டி.ஐ.ஜி. ரகுராம ரெட்டி மற்றும் நந்தியாலா எஸ்பி. ரகுவீரா ரெட்டி தலைமையில் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் ஒரு மணியளவில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் 6 பேருந்துகளில் திடீரென அப்பகுதிக்கு வந்தனர். தெலுங்கு தேசம் கட்சியினரை அங்கிருந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதனால், கட்சி நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், பலரை போலீசார் இரவோடு இரவாக கைது செய்தனர். அதன் பின்னர் சந்திரபாபு நாயுடு இருந்த பேருந்தின் கதவை திறக்கும்படி தட்டினர். ஆனால், சந்திரபாபு நாயுடு திறக்கவில்லை. அதன் பிறகு நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணிக்கு சந்திரபாபு நாயுடு பேருந்தின் கதவை திறந்து விசாரித்தார். அவருடன் போலீசார் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தாங்கள் ஆட்சியில் இருந்தபோது, அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம், மாநிலம் முழுவதும் சீமென்ஸ் மற்றும் டிசைன் டெக் நிறுவனங்கள் மூலம் சீர்மிகு மையங்கள் அமைக்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் ஊழல் நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீங்கள் முதலாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளீர்கள். ஆதலால், உங்களை கைது செய்கிறோம் என சி.ஐ.டி. போலீஸார் கூறினர். அதற்கு எப்.ஐ.ஆர் உள்ளதா ?ஆதாரங்கள் உள்ளதா ? என சந்திரபாபு நாயுடு கேட்டார். அவற்றை வாட்ஸ் ஆப்பில் அனுப்புகிறோம் என போலீசார் பதிலளித்து, சந்திரபாபு நாயுடுவை கைது செய்தனர். இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவை அவரது கார் மூலமாகவே நந்தியாலம் பகுதியில் இருந்து அமராவதிக்கு பலத்த பாதுகாப்புடன் போலீசார்அழைத்து சென்றனர்.

சந்திரபாபு நாயுடுவை நந்தியாலம் பகுதியில் இருந்து அமராவதி வரை தொடர்ந்து 8 மணி நேரம் போலீசார்  காரில் அழைத்து சென்றனர். வழி நெடுகிலும் தெலுங்கு தேசம் கட்சியினர்சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாககுரல் கொடுத்தனர். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் அதிகாலை முதலே ஆந்திராவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவாறு, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்.எல்.ஏக்களை போலீசார் அவரவர் வீடுகளிலேயே ஹவுஸ் அரெஸ்ட் செய்தனர். ஆயினும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாநிலம் முழுவதும் சந்திரபாபு நாயுடுவின் கைதை கண்டித்து சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். 

பின்னர், சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து விஜயவாடாவில் உள்ள சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சந்திரபாபு நாயுடுவிடம் ஊழல் வழக்கு தொடர்பாக பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.  அதை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு நேற்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 

வழக்கு தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை காவலில்  எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி மாநில குற்ற புலனாய்வு துறை தரப்பில் முறையிடப்பட்டது. இந்த மனு தொடர்பான விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வரும் சூழலில், அசம்பாவிதங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என முன்னெச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். 

அதன் அடிப்படையில், நேற்று நெல்லூர் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.வரும் 22-ம் தேதி வரை சந்திரபாபு நாயுடுவை நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்புகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  

Trending News

Latest News

You May Like