1. Home
  2. தமிழ்நாடு

இந்தி தெரியாவிட்டால் மத்திய அரசு வேலை இல்லை! வைகோ ஆவேசம் !

இந்தி தெரியாவிட்டால் மத்திய அரசு வேலை இல்லை! வைகோ ஆவேசம் !


இந்தி தெரியாவிட்டால் மத்திய அரசு வேலை இல்லை என மத்திய அரசின் முடிவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் நல்வாழ்வுத்துறையின் கீழ் ஸ்வஸ்த ஏவம் ஜன் கல்யாண் சன்ஸ்தான் என்ற கிளை அமைப்பு இயங்கி வருகின்றது.

இந்த அமைப்பு, இந்தியா முழுதும் கிராமப்புறங்களில் நல்வாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, கணக்கர்கள், எழுத்தர்கள், கணிணிப் பதிவர்கள், ஆய்வக உதவியாளர்கள், ஓட்டுநர்கள், செவிலியர்கள் என 13 ஆயிரம் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், விண்ணப்பம் தருவதற்கான கடைசி நாள் அக்டோபர் 8 முதல் அக்டோபர் 24 வரை என்று குறிப்பிட்டு உள்ளனர். மேலும் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுகின்றவர்கள், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வேலை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கமாக மத்திய அரசுத் துறைகள் நடத்துகின்ற தேர்வுகளில், கேள்வித்தாள்கள் அனைத்தும், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இருக்கும். ஆனால், தற்போது முதன்முறையாக, 25 மதிப்பெண்களுக்கான கேள்விகள் இந்தியில் மட்டுமே இருக்கும். அதற்கு இந்தியில் தான் விடைகள் எழுத வேண்டும் என வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர். இந்தித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என, வெளிப்படையாகவே அறிவித்து உள்ளனர்.

எனவே, இந்தி தெரியாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு, விண்ணப்பிக்கும் தகுதியும் இல்லை. வேலைவாய்ப்பும் இல்லை என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு. இந்தி பேசாத மாநிலங்களில் பணிபுரியவும், இந்திக்காரர்கள் மட்டுமே தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்ற நிலையை உருவாக்கி இருக்கின்றார்கள். இது இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தின் மீது வெடிகுண்டு வீசுவதற்கு சமம்.

எனவே, இந்த அறிவிப்பை, மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். இந்தி பேசாத மக்களை, இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கும் முயற்சிகளை, பாஜக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like