விஷ சாராய வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் : எல்.முருகன்..!
சென்னை திருவல்லிக்கேணியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உள்ளூர் பொருட்களை ஊக்குவிப்பது, கலாசாரத்தை பாதுகாப்பது குறித்து மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அமெரிக்கா பயணம் எதற்கு என்பதை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
எத்தனை நிறுவனங்களை சந்திக்கிறார்கள் என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் எத்தனை நிறுவனங்களின் முதலீடுகளை கொண்டு வருகிறார்கள் என்பது தெரியும். அமெரிக்கா சென்று வந்த பிறகு, அவர்களது செயல்பாடுகள் எல்லாம் வெளிப்படையாக அறிவிக்கும் போதுதான், அதன் பயன் நமக்கு தெரியும்.
ஏற்கனவே ஸ்பெயின் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு? ஸ்பெயின் பயணத்தின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகளை முதலில் வெளியிடுங்கள். கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரித்தால் தான், விஷ சாராய சம்பவத்தில் உண்மை வெளிவரும்.
மரக்காணம் கள்ளச்சாராய வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்தது, அந்த வழக்கு என்ன ஆனது? பட்டியலின மக்களுக்கான நலத்திட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.