என் மீதான வழக்குகள் தவறான உள்நோக்கம் கொண்டவை : ஜாபர் சாதிக்..!
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக், தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் தவறான உள்நோக்கம் கொண்டவை. மேலும், அந்தக் கைது நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது. எனவே, என் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் ரத்துச் செய்து தம்மை விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், போதைப்பொருள் கடத்தல் வழக்குக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும், தன் மீது தவறான உள் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதை சட்டப்பூர்வமாக்கும் வகையில், தனக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை, திகார் சிறையில் உள்ள தன்னை அமலாக்கத் துறை வழக்கில் கைது செய்வது தொடர்பாக பிடியாணை பெற்றுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனு மீதான விசாரணையை, இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, வெள்ளிக் கிழமைக்கு ஒத்தி வைத்தது.
வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவிலான போதைப் பொருள்களை கடத்தியதாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், தி.மு.க. முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ம் தேதி கைது செய்தனர்.