தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/23e684f344b81a5cf9900a2d72cb480b.jpg?width=836&height=470&resizemode=4)
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் கீழ் முழு கட்டுப்பாடும் வந்துள்ளது. இந்நிலையில் பரிசு பொருட்கள் கொடுப்பது. ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வாகன சோதனையில் இதுவைரை 2 கோடியே 81 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் 26 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள்,போதை பொருள்கள்,18லட்சம் மதிப்பு உள்ள பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டது.
இதனிடையே, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மகளிர் தினக் கொண்டாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சரண்யா விஜய் என்ற எம்ராய்டிங் தையல் பயிற்சி நிபுணர் வழங்கும் 6 மாத இலவச பயிற்சியை பெறுவதற்கு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு பயிற்சி இலவச சான்றிதழை வழங்கினார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுமார் 300 பெண்களுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு சிஎம்பிடி காவல் நிலையத்தில் தேமுதிக சார்பில் மனு அளிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால் காவல் துறையினர் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஆனால், அனுமதியின்றி இந்நிகழ்ச்சி நடைபெறுவதை அறிந்து சிஎம்பிடி போலீஸார் அங்கு சென்று விழா ஏற்பாட்டாளரிடம் அனுமதியின்றி எவ்வாறு நிகழ்ச்சி நடத்தலாம் எனக் கேட்டுள்ளனர்.
அதற்கு தேமுதிகவினர், நிகழ்ச்சி எங்கள் அலுவலகத்தில் நடைபெறுகிறது, இதில் யாருக்கும் எந்த பிரச்சினையும், பாதிப்பும் இல்லை எனக்கூறி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அனுமதி பெறாமல் இந்நிகழ்ச்சியில் ஷாமியானா பந்தல் மற்றும் பேனர் அமைக்கப்பட்டு இருந்தது.
இதனால் இந்த விழாவிற்கு தலைமை தாங்கிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளிராஜ் ஆகியோர் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் அதிகாரி சத்யநாராயணன், சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
3 பிரிவுகளின் கீழ் வழக்கு
அனுமதி இன்றி இலவச டோக்கன் வாங்கிய விவகாரம் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து விசாரணை செய்த கோயம்பேடு பேருந்து காவல் நிலைய போலீசார், பிரேமலதா விஜயகாந்த் இலவச டோக்கன் விவகாரத்தில் 300 மகளிர்க்கு இலவச டோக்கன் வழங்கியது உறுதியானதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் நிகழ்சி ஏற்பாடு செய்த காளிராஜ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது