நீங்க ஜனநாயகம் பத்தியெல்லாம் பேசலாமா? - குடியரசு துணை தலைவருக்கு மனோ தங்கராஜ் எதிர்ப்பு!

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். குடியரசுத் தலைவரை நீதிமன்றம் வழிநடத்தும் முறையை அனுமதிக்க முடியாது என்றும், உச்ச நீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
சட்டம் இயற்றுவது போன்ற நாடாளுமன்ற பணிகளை நீதிபதிகள் செய்கின்றனர் என்றும், பிரிவு 142-ஐ ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையைப் போல உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது எனவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். உச்ச நீதிமன்றத்தை குடியரசு துணைத் தலைவர் நேரடியாக விமர்சனம் செய்தது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், “உச்சநீதிமன்றம் ஜனநாயகத்திற்கு எதிரான அணு ஆயுதம் என துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசமைப்புச் சட்டத்தை படிக்காத மற்றும் மதிக்காதவர்களுக்கு ஜனநாயகம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது. ஆளுநர்களை ஏவி விடுகிறவர்கள் முதலில் அவர்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை படியுங்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், “அரசமைப்புச் சட்டத்தின் விதிகளை யாரேனும் மீறும் பட்சத்தில் உச்சநீதிமன்றம் தலையிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்ற குறைந்தபட்ச அறிவு, துணை ஜனாதிபதிக்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவை” என்றும் மனோ தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார்.