இப்படி கூட நடக்குமா..? ஒரு வதந்தியை பரவியதால் 13 பேர் பலியான சோகம்..!

லக்னோவில் இருந்து, மஹாராஷ்டிராவின் மும்பை நோக்கி புஷ்பக் விரைவு ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. மஹாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள மாஹேஜி மற்றும் பர்தாதே ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பச்சோரா என்ற இடத்தை நேற்று மாலை 5:00 மணிக்கு அடைந்தது.
அப்போது, அந்த ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி பரவியது. இதனால் ரயிலில், இருந்த பயணியர் அச்சமடைந்தனர். ரயிலின் அபாய சங்கிலி பிடித்து இழுக்கப்பட்டதால், உடனே ரயில் நின்றது. இதை தொடர்ந்து பயணியர் பலர் அவசர அவசரமாக தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள கீழே இறங்கி தப்பிக்க முயன்றனர்.
அப்போது அடுத்த தண்டவாளத்தின் எதிர்திசையில், கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து டில்லியை நோக்கி கர்நாடகா விரைவு ரயில் வந்தது. ரயிலில் மோதி 13 பேர் உயிரிழந்தனர். தற்போது வரை 8 பேர் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ள உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், விபத்தை நேரில் பார்த்த ஒருவர்,'ஒரு டீ விற்பவர் ரயிலில் தீப்பிடித்ததாக ஒரு வதந்தியை பரப்பியதால், 13 பேர் ரயிலில் இருந்து அவசரமாக கீழே குதித்து பலியாகினர்' என தெரிவித்துள்ளார்.