ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாமா?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேருவதற்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. ஏனென்றால் சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை, குறிப்பாக பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக கொண்டு வரப்பட்டது இந்த திட்டம்
அதற்கேற்றார்போல் விதிமுறைகளும், விதிவிலக்குகளும் தமிழ்நாடு அரசு நிர்ணயித்திருக்கிறது, ஒரு ரேஷன் கார்டுக்கு ஒருவருக்கு மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும். 2.5 லட்சத்துக்கு மேலான ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்கள், தொழில் வரி செலுத்தும் குடும்பத்தினருக்கு இந்த திட்டத்தில் இடமில்லை.
வார்டு உறுப்பினரைத் தவிர பிற பதவிகளில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும், ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர், எம்பி, எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளில் இருக்கும் குடும்பத்தினர் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற முடியாது. அதேபோல் மத்திய மாநில அரசு பதவிகளில் இருக்கும் குடும்பத்தினர், ஓய்வு பெற்றவர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது. மத்திய, மாநில அரசு பதவிகளில் இருந்து ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாகவே ஓய்வூதியம் பெற்றாலும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர முடியாது.
அதேநேரத்தில் வாழ்க்கையை முடக்கிப்போடும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், எச்ஐவி, பார்கின்சன், தொழுநோய், அறிவுசார் குறைபாடு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பவர்களின் குடும்பத்தினர் வேறு எந்தவகையில் அரசு துறைகளின் உதவித் தொகை பெற்றாலும் இந்த திட்டத்தின் கீழ் பலன் பெற்றுக் கொள்ள முடியும்.
எனவே, அரசு ஊழியர்களின் குடும்பத்தினர், அதாவது ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் குடும்பத்தினர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற முடியாது.