1. Home
  2. தமிழ்நாடு

ஒரு ஆளுநரை தபால்காரர் என்று கூறுவதா? : முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு

1

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் திமுக அரசுக்கும் இடையே முட்டல் மோதல் தொடர்ந்து வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதால் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ஒப்புதல் அளிக்கப்படாத 10 மசோதாக்களுக்கும் தானே ஒப்புதல் வழங்கியது.

மசோதா மீது முடிவு எடுக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவர்களுக்கு மூன்று மாதம் காலக்கெடுவும் விதித்தது. இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என எதிர்க்கட்சிகள் பெருமையுடன் குறிப்பிட்டு வருகின்றன. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனிடையே ஜெகதீப் தன்கரை ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில் ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையேயான தபால்காரர் தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “ஆளுநர் பதவி என்பது மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் மிக்கது. மாநில அரசுக்குத்தான் அதிக அதிகாரங்கள் உள்ளன. ஆகவே, ஆளுநரை தபால்காரர் என்று கொச்சைப்படுத்தி பேசுவது முதல்வருக்கு அழகல்ல” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக நயினார் நாகேந்திரன் குடிநீரில் கழிவுநீர் சேர்ந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில், கழிவுநீர் கலந்த குடிநீரால் உறையூரில் மூன்றரை வயது குழந்தை உட்பட மூன்று பேர் பலியானதாக வெளியாகியுள்ள பத்திரிகைச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

15 நாட்களாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகாரளித்த போதே தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இத்தகைய அசாம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம் என சுட்டிக்காட்டிய அவர், திமுக அரசு இனியாவது தன் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்! அனைத்து பகுதிகளிலும் தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தக்க சிகிச்சையும் நிவாரணமும் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார் நயினார் நாகேந்திரன்.

Trending News

Latest News

You May Like