சி.ஏ.ஜி. அறிக்கை : அரசு போக்குவரத்து கழகத்தின் கடன் 3 மடங்காக அதிகரிப்பு..!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நிதிநிலை குறித்த சிஏஜி அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் கடன் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது, ஊழியர்களை சரியாக பயன்படுத்த முடியாத நிலையில் போன்ற பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை தேனாம்பேட்டையில் நேற்று (டிசம்பர் 10) இந்திய கணக்கு தணிக்கை துறையினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சிஏஜி அறிக்கையை முதன்மை கணக்காய்வு துறை தலைவர் ஜெய்சங்கர் வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள தகவல்களில் முக்கிய அம்சங்கள் வருமாறு., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மொத்த கடன் 21,980 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டிற்கு முன்பு 6,467 கோடி ரூபாயாக இருந்தது. போக்குவரத்து ஊழியர்களின் செலவீனம் 55.20 சதவீதம் முதல் 63.55 சதவீதம் வரை உள்ளது. டிரான்ஸ்பார்மருக்கான டெண்டரில் கட்டாய கட்டண விதியை பின்பற்றாத காரணத்தால் 57,06 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து கழக ஊழியர்களை வேறு பணிக்கு அனுப்பியதால் 495 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மின்னணு ஏல செயல்முறைக்கான இலவச இணைய முகப்பை பயன்படுத்தாத காரணத்தால் 17.82 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. 2021-22ல் 46,538 கோடி ரூபாயாக இருந்த தமிழக அரசின் பற்றாக்குறை 2022-23ல் 36,215 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. 2022-23ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23,64,514 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 14 சதவீதம் வளர்ந்திருக்கிறது.