ஃப்ளக்ஸ் பேனரில் வரவு - செலவு.. ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு..!
தமிழகத்தில் மே 1-ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கிராமத்தின் வரவு செலவு கணக்குகளை ஃப்ளக்ஸ் பேனரில் அச்சிட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2021 - 2022-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து திட்டங்களுக்கான செலவு அறிக்கை, அனைத்து திட்டங்களின் கீழ் பயனடைந்த பயனாளிகளின் விவரம் மற்றும் பணிகளின் முன்னேற்ற விவரங்கள் அடங்கிய முழு அறிக்கை கிராம சபை நடப்பதற்கு முன்னால், 29 மற்றும் 30-ம் தேதிகளில் ஒவ்வொரு கிராம ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுவது உறுதி செய்ய வேண்டும்.
இந்த தகவலை ஃப்ளக்ஸ் பேனரில் அச்சிட்டு பொதுமக்கள் பார்த்து அறியும் வண்ணம் பொருத்த வேண்டும். மேலும், 2022 - 2023-ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட பணிகளின் விவரம் மற்றும் பயனாளிகள் விவரம் அனைத்தும் கிராம சபையில் பொதுமக்கள் முன்னிலையில் படித்துக் காண்பித்து ஒப்புதல் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
மேலும், கிராம ஊராட்சியில் 2021 - 2022-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வரவு - செலவு விவரங்கள் அடங்கிய சுருக்கத்தினை கிராம சபையில் பங்கேற்கும் பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.