1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து..!

Q

கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவர் ஐ.பெரியசாமி. அப்போது முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் பாதுகாவலருக்கு வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது கடந்த 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை எம்.பி., எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனக்கூறி கடந்த ஆண்டு மார்ச் மாதம் விடுவித்தது.
பின்னர் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், எம்.பி., எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கை மறு விசாரணைக்கு எடுத்தார்.
அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். லஞ்சஒழிப்புத்துறை சார்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தீர்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை தள்ளிவைத்தார்.
இந்த வழக்கில் வரும் பிப்ரவரி 26-ம் தேதி (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த்து.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், முறையாக ஒப்புதல் பெற்று வழக்கை மீண்டும் நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like