#BREAKING : பாலியல் குற்றம் நிரூபணமானால் கல்விச் சான்றிதழ் ரத்து..!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. குறிப்பாக கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த விவகாரத்தில் சார்ந்த ஆசிரியர்கள் 3 பேரும்போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், மூவரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.
இதேபோல், திருச்சி, ஈரோடு, ஒசூர், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி மாணவிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான தகவல்கள் சமீபத்தில் வெளியானதால் விவகாரம் விஸ்வரூபமானது. மாணவர்களுக்கு பாதுகாப்பாக விளங்கக்கூடிய பள்ளிகளிலேயே அரங்கேறும் இத்தகைய கொடூர சம்பவங்கள் பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தின. மேலும், தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது பணி நீக்கம் போன்ற கடும் நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.
இதற்கிடையே பாலியல் தொல்லை சம்பவம் தொடர்பான புகாரில் உண்மைத்தன்மை நிரூபணம் செய்யப்பட்டால் சார்ந்த ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். இதையடுத்து மாநிலம் முழுவதும் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்கள் பட்டியலையும், அவர்கள் மீதான நடவடிக்கை விவரங்களையும் அறிக்கையாக சமர்பிக்க வேண்டுமென துறை இயக்குநர்களுக்கு அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள்கிடைத்துள்ளன.
இந்நிலையில் ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான போக்சோ வழக்கில் குற்றம் நிரூபணமானால், அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
பாலியல் புகார் வந்தால் உடனே நேரடியாக ஆய்வு செய்ய செல்ல வேண்டும், உடனுக்குடன் தலைமைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்.