#BREAKING : புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி..!
காதல் திருமண விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிறுவனை கடத்தியதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்தநிலையில் ஏடிஜிபி ஜெயராம் தனது சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறுவன் கடத்தல் வழக்கை வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என்றும் சஸ்பெண்ட் உத்தரவில் தலையிட முடியாது எனவும் தெரிவித்தது. விசாரணை வேறு புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்தநிலையில் நீதிபதி வேல்முருகன் முன்பிருந்த சிறுவன் கடத்தல் வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு மாற்றப்பட்டது.
இந்தசூழலில் பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு இன்று (ஜூன் 27) நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
பூவை ஜெகன் மூர்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகரன், “பூவை ஜெகன்மூர்த்திக்கும் இந்த கடத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. விசாரணைக்காக எந்த நோட்டீஸும் வழங்கவில்லை, மகேஸ்வரி என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மனுதாரர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற தினத்தில் திருமண நிகழ்வுகளுக்கு பூவை ஜெகன்மூர்த்தி சென்றுவிட்டார். அவர் எம்.எல்.ஏ. என்பதால் பலர் உதவி கேட்பார்கள். அந்த வகையில் தான் மகேஸ்வரி உதவி கேட்டிருக்கிறார். இதற்கு பூவை ஜெகன்மூர்த்தி எதுவாக இருந்தாலும் சட்டப்படிதான் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். சம்பந்தப்பட்ட இருவரை பூவை ஜெகன்மூர்த்தி பார்த்ததே இல்லை” என்று வாதிட்டார்.
காவல்துறை சார்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, “சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திதான் மூளையாக செயல்பட்டுள்ளார். காவல்துறை விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை. அவர் அளித்த பதில்கள் தெளிவாக இல்லை. அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது. சாட்சிகளை கலைத்துவிடுவார். இந்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இருத்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று மாலைக்குள் உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதாக உயர் நீதிமன்றம் கருத்து. இதனால் அவர் கைதாக வாய்ப்பு..