#BREAKING : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது..!
தேனி கஞ்சா வழக்கில் ஆஜராகாத சவுக்கு சங்கருக்கு சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து தேனி காவல்துறையினர் அவரை சென்னையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனியில் தங்கியிருந்தபோது 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
சில மாதங்களுக்கு முன்னர் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த போது அவரது கார் மற்றும் அவரது உதவியாளர் உள்ளிட்டோரிடம் தடை செய்யப்பட்ட 2.5 கிலோ கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குறிப்பாக அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் இவர்கள் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டு 6 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு பின்னர் கடந்த ஜூலை மாதம் நிபந்தனை ஜாமினில் வீடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக ஆஜராகாதது குறித்து அவரது வழக்கறிஞர் மனு அளித்தார்.
அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி செங்கமலச்செல்வன் சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து வழக்கின் விசாரணையை 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.