#BREAKING ::மேலும் ஒரு விக்கெட் அவுட்..!நாதகவிலிருந்து மீண்டும் ஒருவர் விலகல்!

நாதக மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஞானசேகரன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"நான் சிறுவயதிலிருந்தே, அம்பேத்கர் மற்றும் பெரியாரியக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, தமிழ் மீதும், தமிழ் ஈழத்தின் மீதும் பற்று கொண்டு, எங்கள் பகுதியில் ஈழத் தமிழர்களுக்காக நடந்த ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு, எனது உணர்வை வெளிப்படுத்தி வந்திருக்கிறேன்.
அதன் பிறகு, 2009- ல் இயக்கமாக இருந்து 2010- ல் நாம் தமிழர் கட்சியாகத் துவங்கப்பட்ட காலத்தில் இருந்து, இன்றைய நாள் வரை, 16 ஆண்டு காலமாக எண்ணற்ற களப்பணிகளையும், கட்டமைப்பையும், நாம் தமிழர் கட்சிக்காக, இளமைக்காலம் முதல் அர்ப்பணிப்போடு செயலாற்றி உள்ளேன்.
சமீப காலமாக கட்சியின் போக்கில் பலப்பல மாற்றங்களும், கொள்கைக்கு முரணான காட்சிகளும் அரங்கேறி வருகிறது.
சாதி ஒழிப்புதான், தமிழ்த் தேசிய விடுதலை என்ற, தோழர் தமிழரசன் கருத்துக்களை மேடை தோறும் பேசிவிட்டு, கட்சிக்காக உழைப்பவர்களை விட்டுவிட்டு, சாதிப் பார்த்து பொறுப்பில் நியமிப்பதும், தகுதியே இல்லை என்றாலும், சாதிப் பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவதும், தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரானது. சாதியை ஒழிக்கும், ஜனநாயக அமைப்பாக நாம் தமிழர் கட்சி இருக்கும் என்று நினைத்தால், சாதியைத் திணிக்கும் சர்வாதிகார அமைப்பாக, சீமான் கொண்டு போகிறார். இந்தத் தவறுகளை சுட்டிக்காட்டி தலைமையில் உள்ளவர்களிடம் கேள்வி கேட்கும்போது, கேள்வி கேட்பவர்களை, கட்சியை விட்டு நீக்குவது அல்லது வேறு ஏதாவது பொறுப்பில் அமர்த்தி அமைதியாக்கிவிடுவது போன்ற, மோசமான செய்கைகளையே பார்க்க முடிகிறது.
நமது கொள்கைக்கு நேரெதிரான, சங்பரிவார் அமைப்புகளோடு கைகோர்த்துக்கொண்டு சங்கிகள் சூழ்ச்சிக்கு தமிழர்களை இறையாக்கிப் பிளவுபடுத்தும் உங்களோடு, என்னால் பயணம் செய்ய முடியாத காரணத்தால், மிகுந்த மனவேதனையுடன், நான் வகித்து வந்த மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகுகிறேன்.
இதுநாள் வரை, உடன் பயணித்த உறவுகளுக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.