#BREAKING: தமிழகத்தில் இரவு நேர கட்டுப்பாடு அமல்..!
தமிழக சட்டசபையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்காக தமிழக ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக விதிமுறைகள் இயற்றப்பட்டுக் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஆதார் எண்ணை இணைத்ததுடன் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கானது நீதிபதிதகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.
அதன்படி கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமிர்த திவாரி, வழக்கறிஞர் அரவிந்த ஆகியோர் ஆஜராகினர்.
அவர்கள் வாதிடுகையில், பணம் செலுத்தி ரம்மி விளையாடினால் அதுவும் சூதாட்டம்தான். எனவே ஆன்லைன் ரம்மியை ஒழுங்குப்படுத்த மாநில அரசுக்கு உரிமை உள்ளது. இதை செய்வது தமிழக அரசின் கடமையாகும். பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் மூலம் வயதை முறையாக சரிபார்க்க முடியாது என்பதால்தான் ஆதார் இணைக்கப்பட்டது.
தமிழக அரசால் ஆன்லைன் ரம்மியை ஒழுங்குப்படுத்த முடியாது என்ற நிறுவனங்களின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது. ஆன்லைன் ரம்மி விளையாடுவதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது
.ஆன்லைனில் விளையாடுபவர்களின் விவரங்களைக் கேட்பதால் தனிப்பட்ட உரிமைக்கு எந்த பாதிப்பும் கிடையாது. எனவே ஆதார் எண் கேட்கப்படுவதை தவிர எந்த ஒரு தனிப்பட்ட தகவலும் கேட்கப்படவில்லை. 18 வயதுக்குள்பட்டவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாடக் கூடாது என்பதற்காகத்தான் ஆதார் கேட்கப்படுகிறது என தமிழக அரசு வாதத்தை முன்வைத்தது.
இதையடுத்து ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வாறு இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் இது தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.
அதாவது ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழக அரசு விதித்திருந்த நேர கட்டுப்பாடு செல்லும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.