#BREAKING: அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்..!

மதுரை உசிலம்பட்டி போலீஸ் கொலை தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு அவை முன்னவர் துரைமுருகன், 'கவன ஈர்ப்பு தீர்மானம் முறையாக கொடுத்தால் மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்' என கோரிக்கை முன் வைத்தார்.
இதையடுத்து, சட்டசபையில் இ.பி.எஸ்., கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படாது' என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்ததால் சட்டசபையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் கடுமையான கூச்சல், குழப்பம் நிலவியது.
தொடர்ந்து, கடும் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் இருந்து சபாநாயகர் அப்பாவு உத்தரவு படி வெளியேற்றப்பட்டனர்.
சபாநாயகர் இருக்கை முன்பு அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். முன்னதாக பேரவையில் எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதிக்க வலியுறுத்தி அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது இருக்கை அருகே அமளியில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதால் அவரது இருக்கை அருகே சென்று முழக்கமிட்டனர்.
பின்னர் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து சபாநாயகர் இடம் அனுமதி பெற்று தான் பேச வேண்டும் என்பது மரபு. சட்டசபை மரபுகளை முறையாக கடைபிடியுங்கள்.
கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அனுமதி பெற வேண்டும். குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து மட்டும் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்ப கூடாது. சபாநாயகரை கை நீட்டி அச்சறுத்தும் வகையில் பேசுவதா? அ.தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.