1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு - சென்னை ஹைகோர்ட்..!

1

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பான காவல்துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாகவும், சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற போதிலும் FIR அறிக்கை காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது என்றும் ஆகையால் இந்தவழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் வரலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி இருந்தார்.

 

இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நேற்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.லக்ஷ்மி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், கைதானவரே குற்றவாளிதான் என்று காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார்? என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

 

மேலும் பெண்கள் ஆண்களுடன் பேச கூடாது. பாதிக்கப்பட்ட மாணவி அங்கு சென்றிருக்க கூடாது என்றெல்லாம் கூறக்கூடாது என்றும் பெண்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது, காதல் என்பது பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம் என்றும் தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணை நடைபெறும் போதே, காவல் ஆணையர் செய்தியாளர்களை எப்படி சந்தித்தார்? அரசு அதிகாரிகளுக்கான நடத்தை விதிகளின்படி, செய்தியாளர்களை சந்திக்கும் முன்பு அரசு அனுமதி பெற வேண்டாமா? எஃப்ஐஆர் வெளியானதற்கு யார் பொறுப்பு? என கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பினர்.

இது தொடர்பாக விரிவான அறிக்கையை 28 ஆம் தேதியான இன்று தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தக்கல் செய்தார். மேலும் நிர்பயா நிதி செலவிடப்பட்டது தொடர்பான அறிக்கையும் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கின் எஃப்ஐஆர் வெளியானது எப்படி? என்றும் எஃப்ஐஆரை பதிவிறக்கம் செய்தவர்கள் யார் என்பதை அறியும் வசதி இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? அந்த அளவுக்கு சிரமமாக உள்ளதா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக எஃப் ஐ ஆர் வெளியானது என்றும் காவல்துறை கசிய விடவில்லை என்றும் பதிலளித்தார்.
 

முதல் தகவல் அறிக்கை கசிந்த உடனேயே காவல்துறை தரப்பில் அது முடக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் முதல் தகவல் அறிக்கையை 14 பேர் பார்த்துள்ளதாகவும், அதனை கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் காவல் துறை விசாரித்து வருகிறது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் பிஎஸ் ராமன் தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதிகள் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் புகார் அளிக்க வருவதற்கே அச்சப்படும் நிலை உள்ளது வேதனை தெரிவித்தனர்.

மேலும் இணையதளத்தில் FIR முடக்கப்பட்ட பிறகும் 14 பேர் அதனை பார்த்தது எப்படி? அரசு ஊழியர்கள் விதிகளின் படி காவல் ஆணையர் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்க முடியுமா? இந்த வழக்கில் குற்றவாளி ஒருவர்தானா வேறு யாரும் உள்ளனரா? என்றும் நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர். அதற்கு இதுதொடர்பாக விசாரித்து வருவதாக தெரிவித்த அரசு வழக்கறிஞர், ஞானசேகரின் செல்போன் ஏரோபிளேன் மோடில் இருந்தது என்றும் தனக்கு பின்னால் பெரிய குழு இருப்பதைப் போல் மற்றவர்கள் ஞானசேகரன் காட்டியுள்ளார் என்றும் தெரிவித்தார்.

மேலும் அரசு விதிகளின்படி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அலுவலல் ரீதியாக செய்தியாளர்களை சந்திக்கலாம் என்றும் தனிப்பட்ட முறையில்தான் சந்திக்க கூடாது என்றும் தெரிவித்தார். இதையடுத்து அரசின் அனுமதி பெறாமல் சென்னை காவல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார் என்றும் சென்னை காவல் ஆணையர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை குறிப்பிட்டது தவறு என்றும் பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மாணவி தொடர்ந்து படிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பாதிக்கப்பட்ட மாணவியிடம் கல்வி கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என்றும் மாணவியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பை டிஜிபி வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like