#BREAKING : வாகனங்களில் 'மருத்துவர்' ஸ்டிக்கர் ஒட்ட அனுமதி..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/c6fd8f4027c86c6c57698726a3deb274.webp?width=836&height=470&resizemode=4)
தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் மற்றும் மருத்துவர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பில் இருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் கே.ஸ்ரீனிவாசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மருத்துவர்கள் எந்த விதமான விதி மீறல்களிலும் ஈடுபடுவதில்லை. மருத்துவர் என வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற அறிவிப்பால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பணி நிமித்தமாக அவசரமாக பயணம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஆர். கலைமதி முன்பு விசாரணைக்கு வந்த போது, அப்போது, அரசு சார்பில் வழக்கறிஞர் K.M.D. முகிலன் ஆஜராகி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்களுக்கு தனியாக விலக்களிக்க சட்டத்தில் இடமில்லை என கூறினார். மேலும், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவர்கள் ஸ்டிக்கர் பயன்படுத்த இடைக்கால அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மே 22ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இந்த நிலையில், இந்த விசாரணைக்கு வந்த நிலையில், மருத்துவர்கள் ஸ்டிக்கர் ஒட்ட நீதிமன்றம் அனுமதித்துள்ளது. ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாக பயன்படுத்தினால் போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது. நம்பர் பிளேட் உள்ளிட்ட இடங்களில் ஒட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்.ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாக பயன்படுத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம்.