#BREAKING : கால்பந்து திடல்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப்பெற சென்னை மாநகராட்சி முடிவு!

சென்னையில் சைதாப்பேட்டை, வியாசர்பாடி , திரு வி.க. நகர் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல்தரை கால்பந்து விளையாட்டுத் திடல்கள் தனியாருக்கு ஒப்படைக்கப்படும் என்றும், இனி அங்கு விளையாடச் செல்லும் இளைஞர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்த முடிவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். குறிப்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார்.விளையாட்டுத் திடல்களை தனியாரிடம் ஒப்படைத்து அங்கு விளையாடுவதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால் ஏழை மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் விளையாட முடியாது. அது விளையாட்டுகளின் வீழ்ச்சிக்குத் தான் வழிவகுக்கும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கால்பந்து திடல்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப்பெற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.