#BREAKING : நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமின்..! ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்த உத்தரவு..!
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த மாதம் 5-ம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக இப்படம் சாதனை படைத்து வருகிறது. முன்னதாக இந்தப் படத்துக்கு தெலுங்கானா அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது. அதன்படி கடந்த மாதம் 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக நடிகர் அல்லு அர்ஜுன் அறிவித்தார். ரேவதி உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த மாதம் 13-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நடிகர் அல்லு அர்ஜுன் பிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், நடிகர் அல்லு அர்ஜுன் பிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் தொடர்பான வழக்கு ஐதராபாத் 2வது கூடுதல் பெருநகர நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமின் வழங்கி ₹1 லட்சம் பிணைத்தொகை செலுத்த ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.