#BREAKING : ஆப்கானிஸ்தான் அணி அசத்தல் வெற்றி..! 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லாகூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரான் கடைசி ஓவர் வரை விளையாடி 177 ரன்கள் குவித்து ஆப்கானிஸ்தான் அணி சவாலான ஸ்கோரை எடுப்பதற்கு உதவியாக இருந்தார். 146 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்சர் 12 பவுண்டரியுடன் 177 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஷாகிதி 40 ரன்களும் அஸ்மதுல்லா உமர் சாய் 41 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒரளவு ரன்கள் சேர்க்க 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் அணி 325 ரன்கள் குவித்தது. இதையடுத்து 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.
தொடக்க வீரர் பிலிப் சால்ட் 12 ரன்னிலும் பென் டக்கட் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜெமி ஸ்மித் 9 ரன்கள் எடுத்தார். ஹேரி ப்ரூக் 25 ரன்களும், கேப்டன் ஜாஸ் பட்லர் 38 ரன்களும் எடுத்தனர். விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சதம் அடித்து அணிக்கு தொடர்ந்து நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு பக்க பலமாக ஜெமி ஓவர்டன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 8-ஆவது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜோ ரூட் 112 ரன்கள் எடுத்து வெளியேற, அவரைத் தொடர்ந்து ஓவர்டன் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். 49.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 317 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.