#BREAKING : நடிகர் நாசரின் தந்தை காலமானார்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/ac30d2c23433745ada135881ce3ceaa5.png?width=836&height=470&resizemode=4)
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லன், ஹீரோ, குணச்சித்ரம் என நடித்து வருபவர் நாசர். இயக்குனர், தயாரிப்பாளராகவும் உள்ளார். இந்தியாவில் பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது நடிகர் சங்க தலைவராகவும் உள்ளார். இவரது தந்தை மெஹபூப் பாஷா செங்கல்பட்டு மாவட்டம், தட்டான்மலையில் வசித்து வருகிறார். வயது மூப்பு மற்றும் உடல்நலத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தனது வீட்டிலேயே இன்று(அக்., 10) மறைந்தார்.
செங்கல்பட்டில் நகைகளைப் பாலிஷ் செய்து வந்த நாசரின் தந்தை மெகபூப் பாஷா, தனது மகனை நடிகனாக்கி அழகு பார்க்க விரும்பினார். தந்தையின் ஆசைக்காக நடிப்புப் பயிற்சி பெறுவதற்காக கொஞ்சமும் விருப்பமில்லாமல் நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்தார் நாசர். அதன் பின்னர், நடிப்புப் பயிற்சி முடித்துவிட்டு, பெரியளவில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில், தாஜ் ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக வேலைக்குச் சென்றார் நாசர். மீண்டும் அவரின் தந்தை அவரைக் கடுமையாகத் திட்டி, நடிக்க வாய்ப்பு தேடி முயற்சிக்க சொன்னார்.
பலமுறை வேண்டாமென தவிர்த்துவிட்டுச் சென்ற நடிப்பு நாசரின் தனிப்பெரும் அடையாளமானது. நகைகளை பாலீஷ் செய்யும் தொழில் செய்து வந்த ஏழைத் தந்தையின் கனவு, தன் மகன் நாசரை இந்திய சினிமாவின் மதிப்பிற்குரிய நடிப்பின் அடையாளமாக உயர வைத்தது.