#BREAKING : மேலும் 50 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..இதுவரை 142 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/372e80e47f535a3eb17bf00abd1d6958.jpg?width=836&height=470&resizemode=4)
பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் நுழைந்த சிலர் வண்ண புகை குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தினர்.இந்த விவகாரத்தில் இதுவரை 6 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நாடளுமன்ற பாதுகாப்பு தொடர்பாக பெரும் அச்சம் எழுந்த நிலையில் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கையை வெளியிடக் கோரி கடந்த 14ஆம் தேதி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் திமுகவைச் சேர்ந்த கனிமொழி, காங்கிரஸை சேர்ந்த ஜோதிமணி உள்ளிட்ட 13 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து எதிக்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் லோக்சபாவில் நேற்று அமளியில் ஈடுபட்டனர். பலமுறை எச்சரித்தும் கேளாமல் ரகளையில் ஈடுபட்ட எம்.பி.,க்கள் 33 எம்.பி.,க்களை சஸ்பெண்ட் செய்து லோக்சபா சபாநாயகர் உத்தரவிட்டார்.
அதேபோல்,மாநிலங்களவையில் நாடாளுமன்ற விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களான பிரமோத் திவாரி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், ரஜனி அசோக்ராவ் பாட்டீல் உள்ளிட்ட 45 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.70 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் ஒரேநாளில் 78 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மக்களவையில் இருந்து மேலும் 50 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் .நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக 142 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மக்களவை -96 | மாநிலங்களவை -46