பாஜகவில் இணைந்த பிரபல குத்துச்சண்டை வீரர்..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/27a3ba492c999d93d56ff9eaeb3f125c.jpg?width=836&height=470&resizemode=4)
ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்தவர் குத்துச்சண்டை வீரர் விஜேத்திர சிங். 2008ம் ஆண்டு நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதனால், இந்திய விளையாட்டுத் துறை வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பிடித்ததோடு, நாடு முழுவதும் நன்கு அறியபட்ட விளையாட்டு வீரராக வளர்ந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த விஜேந்திர சிங், கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டார். அதில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரியிடம் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையில் இவரும் பங்கேற்றார்.
வரும் மக்களவைத் தேர்தலில் மதுரா தொகுதியில் இவரை நிறுத்த காங்கிரஸ் ஆலோசனை நடத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகுதியில் தான் பாஜக சார்பில் நடிகை ஹேமா மாலினி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் 30ம் தேதி சிங், தனது எக்ஸ் பக்கத்தில் சர்சையை ஏற்படுத்தும் கருத்தை பதிவிட்டார். அதில், ‘மக்கள் எங்கு விரும்பினாலும், நான் அதற்குத் தயார்’, எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் விஜேந்திர சிங், இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார். டெல்லியில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிங், ‘நாட்டின் நலனுக்காகவும் மக்களுக்கு சேவை செய்வதற்காகவும் நான் பாஜகவில் இணைந்துள்ளேன். நான் அதிக அளவிலான மக்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன்.’, என்றார்.