பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளும் தேதி.. அறிவித்தார் அமைச்சர் சுப்பிரமணியன்..!

தமிழகத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வந்த மெகா தடுப்பூசி முகாம்கள், முழு ஊரடங்கு காரணமாக சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் இன்று (8ம் தேதி) 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், “உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை எவரெஸ்ட் சிகரம் போல் உயர்ந்து கொண்டு இருக்கிறது.
உலகளவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக நேற்று 26.06 லட்சம் பேருக்கு ஒரு நாள் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரவு நேர பொது முடக்கத்திற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் இல்லை.
ஒவ்வொரு பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வரே தொடங்கி வைத்தார். 35 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த கண்டறியப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள தகுதியுடைய நபர்களுக்கு ஜனவரி 10-ம் தேதி தடுப்பூசி செலுத்தப்படும்.
33 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியிருந்தது. அதில், 21 லட்சம் தடுப்பூசி வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை முதல் டோஸ் 92 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 71 சதவீதம் பேருக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.