முதல்வர் ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை!
சென்னையில் வசித்து வரும் தமிநாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகை திரிஷா வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நடிகர் எஸ்.வி. சேகர் மற்றும் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பகுதிகளை சேர்ந்த போலீசாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று, சென்னை கோட்டையில் உள்ள கடற்படை உணவகம், புரசைவாக்கம் பிஎஸ்என்எல் அலுவலகம், தேனாம்பேட்டை தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகம், சென்னை விமான நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலகம், மத்திய அரசின் வருவாய் துறை அலுவலகங்கள், அமலாக்கத்துறை அலுவலகங்கள் என பொதுமக்கள் அதிகமாக வந்துபோகக்கூடிய இடங்களிலும், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகங்கள், பிரபலங்கள், திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் இல்லங்கள் என தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலம் வந்து கொண்டே இருக்கிறது.
இதுதொடர் பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இதையடுத்து தீவிர கண்காணிப்பு செய்து ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் அனைத்தும் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் மின்னஞ்சல் வந்திருப்பதாக போலீசார் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.