சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி எஸ் டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்த இரு அலுவலகத்துக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதை அறிந்த அலுவலக ஊழியர்கள் நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, நுங்கம்பாக்கம் போலீசார் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், வெடி குண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ஜி எஸ் டி அலுவலகம் மற்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, இரு அலுவலகங்களில் பணி புரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அலுவலகத்தில் இருந்து வெகு தொலைவில் நிற்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால், ஜி எஸ் டி அலுவலகம் மற்றும் மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகிய இரு அலுவலகங்களில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த வெடி குண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்ததில், ஜிஎஸ்டி அலுவலகத்துக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல, வானிலை ஆய்வு மையத்துக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பெயரில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது தெரிய வந்தது. இந்த மின்னஞ்சல்களை அனுப்பிய மர் நபர் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் சமீபகாலமாக வெடி குண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில், ஆட்சியர் அலுவலகம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனிடையே, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் வீட்டில் மர்ம நபர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தை அடுத்து, அவரது வீட்டில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற் கொண்டனர். நுங்கம்பாக்கம் ஜி எஸ் டி அலுவலகம் மற்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகியவற்றி சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற சோதனைக்கு பிறகு வெடி குண்டுகள் ஏதும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதன் பின்னரே அது வெறும் புரளி என தெரிய வந்தது.
.png)