1. Home
  2. தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

1

சென்னை உள்நாட்டு விமான நிலைய மேலாளர் அறைக்கு இன்று பகல் 2 மணி அளவில், மர்ம தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர் ஒருவர், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் வெடித்து சிதறும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதை அடுத்து விமான நிலைய மேலாளர், உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குனர், வெடிகுண்டுகள் கண்டறியும் நிபுணர்கள் குழு ஆகியோருக்கு அவசர தகவல்கள் கொடுத்தார்.இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில், விமான நிலைய இயக்குனர் தலைமையில் உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம், இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் தொடங்கி நடந்தது. அந்தக் கூட்டத்தில் விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணர் குழுவினர், விமான நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல், வழக்கமான புரளியாக தான் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை விமான நிலையம் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புகள் சோதனைகள் நடந்து வருகின்றன.

மேலும் விமான நிலைய வாகனங்கள் நிறுத்தும் இடம், விமானங்களுக்கு எரிபொருள்கள் நிரப்பும் இடம், விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் இடங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்களும், சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களில் சந்தேகப்பட்ட வாகனங்களை நிறுத்தி, சோதனை இடுகின்றனர்.

இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக, இதைப் போன்ற வெடிகுண்டு புரளிகள் தொடர்ச்சியாக வந்து கொண்டு இருக்கின்றன. அதைப்போல் இதுவும் புரளியாக தான் இருக்கும் என்று தெரிகிறது.

ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு சோதனைகளை தொடங்கி நடத்தி வருகிறோம். இதனால் விமான சேவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இதைப் போன்ற புரளியை கிளப்பி விடும் சமூக விரோத விஷமிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

இது வெறும் புரளி தான், இதனால் சென்னை விமான நிலையத்தில், பாதிப்பு எதுவும் இல்லை. புரளியை கிளப்பி விடும் சமூக விரோத கும்பலை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like