ரெய்டில் சிக்கிய போத்தீஸ், சென்னை சில்க்ஸ்- தமிழகம் முழுவதும் 100 இடங்களில் திடீர் சோதனை !
தமிழகம் முழுவதும் போத்தீஸ் உள்ளிட்ட பிரபல ஜவுளி நிறுவனங்களுக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வணிக வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
ஜவுளி நிறுவனங்கள் போலியான ஆவணங்களை தயாரித்து வணிக வரி ஏய்ப்பு செய்ததாக வணிகவரிதுறைக்கு புகார்கள் குவிந்தன. இதனையடுத்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்து கண்காணித்து வந்தனர்.
அதன் அடிப்படையில் நேற்று மாலை முதல் வணிகவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பிரபல ஜவுளி நிறுவனங்கள் இருக்கக்கூடிய முக்கிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி., போத்தீஸ், நல்லி சில்க்ஸ், ஆனந்தம் ரீட்டைல்ஸ் பி.லிட். உள்ளிட்ட நிறுவனங்களில் தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் இயங்கி வரக்கூடிய நல்லி சில்க்ஸ், சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி,போத்தீஸ் ஆகிய நிறுவனங்களில் 39 இடங்கள், நெல்லையில் 15 இடங்கள், கோவை, மதுரையில் தலா 13 இடங்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 103 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
மாலை நேரத்தில் அதிகாரிகள் திடீரென கடைகளுக்குள் நுழைந்து சோதனை நடத்தியதால் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அண்மையில் சென்னையில் உள்ள பிரபல நகை கடையில் போலி நகை விற்பனை செய்ததாக சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in